Saturday, September 20, 2014

பாலியல் வன்முறைப் புகார்களின் மீது ஓர் ஊடு பார்வை

(நம் வலைப்பூ செயல்படாமல் பலகாலம் உறைந்து கிடந்தது. முன்னம் செயல்பட்ட காலத்தில் வரைவாக எழுதிவைத்து வெளியிடாமல் இருந்த கட்டுரை இது)

பல
இடங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. சில இடங்களில் பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இவ்விதம் குற்றம் சாட்டப்பட்டவர்களை முறையான விசாரணையாலும், நீதிபரிபாலன முறைகளாலும் எதிர்கொள்ளவேண்டும். ஆனால், தேர்ந்தெடுத்த வழக்குகளை மட்டும் பரபரப்புக்கு உள்ளாக்கி, ஊதிப் பெருக்கி தங்களுக்கான அரசியல் ஆயுதமாக மாற்றுகின்றன வலதுசாரி சக்திகள்.

       
 முற்போக்கு சக்திகளுக்கு இங்கே ஒரு தடுமாற்றம். நடந்திருப்பதாகக் கருதப்படும் குற்றத்தை எதிர்ப்பதா, அதனை அரசியல் ஆயுதமாக மாற்றும் வலதுசாரிகளின் முயற்சியை எதிர்ப்பதா என்று. இதில் என் நிலை: குற்றச்சாட்டு கேட்பாரில்லாமல் போகும் இடங்களில், புகார்தாரரின் குரல் கேட்கப்படுவதற்கு, முறைப்படி வழக்கு நடப்பதற்கு முற்போக்காளர்கள், பெண்ணியவாதிகள், பத்திரிகையாளர்கள் செயற்பாட்டாளர்கள் உதவலாம்.
       ஆனால், அரசியல் உள்நோக்கங்கள் அளவுக்கு அதிகமாக செயல்பட்டு குற்றம் சாட்டப்படுகிறவர் மிகையாக வேட்டையாடப்படும் இடங்களில், குற்றம் சாட்டப்படுகிறவர் தம் தரப்பு நியாயத்தை வாதிடுவதற்கான பாதுகாப்பான வெளியை உருவாக்குவதே முற்போக்காளர்கள், செயற்பாட்டாளர்கள், பெண்ணிய வாதிகளின் பணியாக இருக்கவேண்டும். அதிகார தாரதம்மியத்தில் பலம் குறைந்த பக்கத்தின் குரல் அநீதியான முறையில் நசுக்கப்படாமல் பாதுகாக்கவேண்டியதே நம் கடமை. இங்கே தருண் தேஜ்பாலுக்கு எதிராக செயல்படுவது புகார்தாரரான அந்தப் பெண்ணின் பலம் மட்டுமல்ல, மத அடிப்படை வாத அரசியல் அமைப்புகளும், மாநில அரசின் அதிகாரமும் அவருக்கு எதிராக மிருக பலத்தோடு செயல்படுகின்றன. குஜராத்திலும், கர்நாடகத்திலும் பெண்களின் மீது பாலியல் தாக்குதல் தொடுப்பதை கொள்கையாக செயல்படுத்தியவர்களின் அரசு, புகாரே தராத டெஹல்கா பெண் பத்திரிகையாளர் மீது லிஃப்டில் நடந்ததாக சாட்டப்படும் குற்றத்தை எதிர்த்து தீவிர நடவடிக்கை எடுக்கிறது. தேஜ்பால் வீடு தாக்கப்படுகிறது. 24 மணி நேரமும் ஊடகம் அவரைத் துரத்துகிறது. தேஜ்பாலும், டெஹல்காவின் மேலாண் ஆசிரியர் ஷோமா சௌத்ரியும் பொறுப்பில் இருந்து விலகுகிறார்கள். நடக்கட்டும்.

தருண் தேஜ்பாலை, டெஹல்காவை வேட்டையாடுவதன் மூலம், உண்மைகளைத் தெரிந்துகொள்வதற்கான பரந்துபட்ட மக்களின் உரிமையை வேட்டையாட இவர்கள் முனைகிறார்களே. இதனை எதிர்த்து யார் தீவிர நடவடிக்கை எடுப்பது?


   நடந்ததாக் சொல்லப்படும் குற்றத்தைக் குறித்துக் கூற, புகார் செய்ய விமர்சிக்க அந்தப் பெண்ணுக்கு, ஊடகங்களுக்கு, போலீசுக்கு மிதமிஞ்சிய வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதனை மறுக்க குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் முன்பே அவரது தார்மீக வெளி முழுவதும் அடித்துச் சிதைக்கப்படுகிறது. இதெல்லாம் ஓர் எளிய பெண் பத்திரிகையாளரை முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியல் தாக்குதல் என்பது நமக்குப் புரிந்த பிறகும், அந்தத் தாக்குதலை எதிர்கொள்வதற்கான அரசியல் இல்லாமல் போகிறதா நம்மிடம்?